இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ருவிட்டர் கணக்குக்குள் ஊடுருவிய இணைய மோசடிக் கும்பல் அவரது கணக்கில் இருந்து கிரிப்டோகரன்சி (cryptocurrency) மூலம் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு பலருக்குச் செய்தி அனுப்பியுள்ளது.
இந்த செயல்பாடு குறித்து அறிந்திருப்பதாகவும் பிரதமரின் கணக்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ருவிட்டர் நிறுவனம் தெரிவித்தது.
நாங்கள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மேலும், அதிகப்படியான ருவிட்டர் கணக்குகளுக்கும் இதுபோன்று இணைய மோசடிக் கும்பல் ஊடுருவியுள்ளதா? என்பது குறித்துத் தெரியவில்லை எனவும் ருவிட்டர் செய்தித் தொடர்பாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தொழிலதிபர் எலான் மஸ்க், மைக்ரோசொப்ட் நிறுவுநர் பில் கேட்ஸ் உட்பட உலகின் முக்கிய நபர்களின் ருவிட்டர் கணக்குகளிலும் மோசடிக் கும்பல் ஊடுருவி இதுபோன்று நிதி மோசடியில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.